தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் மனைவிமார் விதவைகளானது எப்படி? கெஹலியவிடம் கேள்வி
28th July 2010 · 0 Comments
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு முக்கியஸ்தர்களின் மனைவிமார் விதவைகளானது எப்படி என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியினால் அமைச்சரவை பேச்சாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல திக்குமுக்காடிப் போனார்.
தன்னை ஒருவாறு சுதாகரித்துக் கொண்ட அமைச்சர் அவ்வாறான அறிக்கை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் தேடியறிந்து பதிலளிப்பதாகவும் கூறினார்.
தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகெல்ல, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் யுஎன்பீ மெதவெல, கடற்படை பேச்சாளர் கப்டன் செனரத், விமானப் படை பேச்சார் கப்டன் நாணயக்கார மற்றும் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஊடகவியலாளர் மாநாட்டின் கேள்வி நேரத்தின் போது, தமிழீழ விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு நிலையில் குறிப்பிட்ட இரண்டு புலி முக்கியஸ்தர்களின் மனைவிமார்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக உள்ளூர் ஆங்கில ஊடக மொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறாயின் கைது செய்யப்பட்ட புலி முக்கியஸ்தர்கள் இருவரின் மனைவிகளும் விதவையானது எவ்வாறு என கேள்வியெழுப்பினார்.
கேள்வியை மீண்டுமொரு தடவை கேட்குமாறு ஊடகவியலாளரிடம் கேட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஊடக அறிக்கை தொடர்பில் தனக்கு எதுவுமே தெரியாது என்பதுடன் விடயங்களை தேடியறிந்து பதிலளிக்கின்றேன் என்றார்.



