தர்ஷிகாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பிவைப்பு!
28th July 2010 · 0 Comments
வேலணை அரச வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் பதில் கடமையாற்றியபோது திடீர் மரணம் அடைந்த குடும்ப நலப் பணியாளர் எஸ்.தர்ஷிகாவின் சடலம் கைதடி கிழக்கில் உள்ள ஊற்றல் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் புதியதொரு மரண பரிசோதனைக்காக இன்று காலை 8.00 மணியளவில் தோண்டியெடுக்கப்பட்டது.
ஏற்கனவே இவரின் மரண பரிசோதனை யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டு அது ஒரு தற்கொலை மரணம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தர்ஷிகாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று அவரின் தாயார் இந்நீதிமன்றத்துக்கு முறையிட்டமையை அடுத்தே மீண்டும் ஒரு மரண பரிசோதனைக்காக உத்தரவிடப்பட்டது. ஊர்காவல்துறை நீதிவான் இ.வசந்தசேனன் மயானத்துக்கு நேரில் வந்து சடலம் உரிய முறையில் தோண்டப்படுகின்றமையை அவதானித்தார்.
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொலிஸார், சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொலிஸார், கைதடியில் தர்ஷிகாவின் பகுதியைச் சேர்ந்த கிராம சேவையாளர், தர்ஷிகாவின் உறவினர்கள் ஆகியோரும் மயானத்துக்கு வந்திருந்தார்கள். சடலம் மரண பரிசோதனைக்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.



