ஐ.நா.வின் நிபுணர் குழு இலங்கை விசாவுக்கு விண்ணப்பிக்கவில்லை: உயர் இராஜதந்திரி தகவல்
25th July 2010 · 0 Comments
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கையின் போர்க்குற்ற விவகாரங்கள் குறித்து அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமித்த நிபுணர் குழு, இலங்கைக்கு விஜயம் செய்ய விசா கோரி இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று அமெரிக்காவில் செயலாற்றும் இலங்கை உயர் இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் தலைமையில் அமெரிக்காவையும் தென்னாபிரிக்காவையும் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களை கொண்ட மேற்படி ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு, செயலாளர் நாயகத்தினால் சம்பிரதாய முறைப்படி நியமிக்கப்பட்ட பின்னர் நியூயோர்க்கில் இன்னம் உத்தியோகபூர்வ பேச்சுக்களை ஆரம்பிக்கவில்லை என்றும் பிரஸ்தாப இராஜதந்திரி கூறினார்.
எவ்வாறாயினும், குழு இலங்கைக்கு விஜயம் செய்ய விசா கோராதிருப்பது ஒருபுறமிருக்க, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இவர்களுக்கு விசா கோரி விண்ணப்பித்தாலும் விசா வழங்குவதில்லை என்று இலங்கை அரசாங்கம் முன்னரே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் குழுவின் செயற்பாடு பற்றி தெரிவித்த போது, தம்மால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒரு விசாரணைக் குழு அல்லவென்றும் கடந்த மே மாதம் 23 ம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கும் இலங்கைக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட கூட்டு அறிக்கையின் குறிக்கோள்களை முன்னெடுப்பதற்காகவே நியமிக்கப்பட்டது என்றும் கூறியிருக்கிறார்.
குழுவின் தலைவர் மர்சூகி தருஸ்மன் ஏற்கெனவே பி.பி.சி.க்கு கருத்து தெரிவித்த போது, தமக்கும் தமது இரு சகாக்களுக்கும் விசா வழங்குவதில்லை என்ற இலங்கையின் தீர்மானம் துரதிஷ்டவசமானதே என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நிலவும் உண்மை நிலையை கண்டறிவதற்கு இது தடையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.



