ரஷ்ய உளவாளிகளுடன் புடின் ஆடிப்பாடி மகிழ்ச்சி
26th July 2010 · 0 Comments
“அமெரிக்காவால் விடுவிக்கப்பட்ட ரஷ்ய உளவாளிகளுக்கு பிரகாசமான எதிர்காலம் அமைத்துத் தரப்படும்’ என்று, ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் தெரிவித்தார். ரஷ்யாவைச் சேர்ந்த 10 உளவாளிகள், அமெரிக்காவில் பல நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டு, வேவு பார்த்து வந்தனர். இவர்களைக் கண்டுபிடித்த அமெரிக்கா, கைது செய்தது.
பின்னர், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, ரஷ்யா கைது செய்திருந்த நான்கு அமெரிக்க உளவாளிகளை விடுவித்ததற்கு பதிலாக, ரஷ்ய உளவாளிகள் 10 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ரஷ்யா வந்து சேர்ந்தனர். இந்நிலையில் நேற்று ஒரு “டிவி’க்குப் பேட்டியளித்த ரஷ்ய பிரதமர் புடின் கூறியதாவது: ரஷ்ய உளவுத் துறையான கே.ஜி.பி., உளவாளியாக கிழக்கு ஜெர்மனியில் நான் இருந்தேன். ஒரு உளவாளியாக வேலை பார்ப்பது என்பது மிகவும் கடினம்.
உங்கள் தாய்மொழியைப் போல், நீங்கள் தங்கி இருக்கும் நாட்டின் மொழியையும் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். தாய்நாட்டின் நலனுக்காக சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இப்போது ரஷ்யா திரும்பியுள்ள உளவாளிகளுக்கு நல்ல வேலை தரப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். அவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. நாங்கள் சந்தித்தோம்.
வாழ்க்கை பற்றி பேசினோம். தேசிய கீதம் உள்ளிட்ட பல பாடல்களைப் பாடினோம். யார் யார் துரோகம் செய்தவர்கள் என்பது எனக்குத் தெரியும். இவ்வாறு புடின் தெரிவித்தார். உளவாளிகளை அவர் எங்கு சந்தித்தார் என்பதையும், இவர்கள் பிடிபடக் காரணமாக அமெரிக்காவில் உள்ளவர்கள் பெயர்களையும் கூற அவர் மறுத்துவிட்டார்.



