இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி
26th July 2010 · 0 Comments
நேபாள சிறுமி அதிதி, கின்னசில் இடம் பெறுவதற்காக, தனி இசை ஆல்பம் வெளியிட்டுள்ளாள். நேபாள நாட்டைச் சேர்ந்த இசைக்கலைஞர் உத்தாப்; இவரது 3 வயது மகள் அதிதி, அண்மையில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக, தனி இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டிருக்கிறாள். அந்த ஆல்பத்தில், அந்நாட்டு தேசிய கீதம் உட்பட, ஒன்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அதிதி பாடியும், நடித்தும் இருக்கிறாள்.
இந்த ஆல்பத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில், பல்வேறு இசைக் கலைஞர்களும், பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர். விழா மேடையில், அதிதி மூன்று பாடல்களை பாடினாள். அதிதி தந்தை உத்தாப் கூறியதாவது: அதிதி பிறந்த ஆறாவது மாதத்திலேயே பேசத் தொடங்கிவிட்டாள். அவளது சகோதரி அஸ்னா பாடுவதை கூர்ந்து கவனிப்பாள். இதனால், இசையில் அவளுக்கு உள்ள ஆர்வத்தை புரிந்து கொண்டு பயிற்சி அளிக்கத் தொடங்கினேன்.
அதிதி, 2 வயதிலிருந்தே பல்வேறு மேடைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடத்தொடங்கிவிட்டாள். தற்போது, உலகிலேயே மிகக் குறைந்த வயதில் இசை ஆல்பம் வெளியிட்டவர் என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் அதிதியின் பெயர் இடம் பெறுவதற்காக இந்த இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. மிக சிறிய வயதில் இந்த சாதனையை யாரும் நிகழ்த்தவில்லை என்று கருதுகிறேன்.
எனவே, அதிதியின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் என்று நம்புகிறேன். இவ்வாறு உத்தாப் கூறினார். ஆனால், உத்தாப்பின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக, 2006ம் ஆண்டில், மால்டோவாவில் பிறந்த ரோமானியன் பாடகர், “சிலியோபாட்ரா ஸ்டாட்ரன்’, அதிதியின் தற்போதைய வயதிலேயே இசை ஆல்பம் வெளியிட்டு சாதனை படைத்துள்ளார்.



